🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 காரைதீவு பிரதேச சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டத்தில் அனல் பறந்த விவாதம் : பள்ளிக்காணி வழக்கு தொடர்பில் சூடு பிடித்த விவாதம் - சபையை ஒத்திவைத்த தவிசாளர்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….
✅👉 காரைதீவு பிரதேச சபையின் 04வது சபையின் 12வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் நலன் மற்றும் அபிவிருத்தியை முன்னிறுத்திய பல முக்கிய பிரேரணைகள் ஆராயப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கடந்த அமர்வின் கூட்டறிக்கையும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் கூட்டத்தில் சபைக்கு தெரியப்படுத்தப்படும் முக்கிய விடயமாக, 2026ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட டித்வா வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ள காரைதீவு–07 பிரதேசத்தில் அமைந்துள்ள திருமால் முக வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான கேள்வி கோரல் நடவடிக்கைகள் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சபைக்கு சமூகமளித்த உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், உறுப்பினர்களான ஏ.எம்.ஜாஹீர், எம்.என்.எம். ரணீஸ் ஆகியோர் முஸ்லிம் பிரதேசங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமது எதிர்ப்பை முன்வைத்து காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தவிசாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைகளில், 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான மீளளிக்கப்படாத முத்திரை வரியை கிழக்கு மாகாண திறைசேரி இடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டதுடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக கல்விக் கருத்தரங்கொன்றை நடத்துதல் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கான போட்டோ பிரதி இயந்திரத்திற்கு புதிய டோனர் கொள்வனவு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டது
மேலும், சபையின் JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்தல், காரைதீவு கடற்கரை பூங்காவில் உள்ள கடையறையை மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்குதல் மற்றும் நிதி உதவியாளர் இடமாற்றத்தைத் தொடர்ந்து அலுவலக காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான பிரேரணைகளும் விவாதிக்கப்பட்டு JCB இயந்திரத்தை முழுமையாக திருத்தம் செய்யும் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டது.
அத்துடன், பள்ளிவாசல் காணியென முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குக்கான வழக்கறிஞருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரித்தல் தொடர்பிலான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது சகல முஸ்லிம் உறுப்பினர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இதன்போது எழுந்தது. சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 05 நிமிடங்கள் சபையை தவிசாளர் ஒத்திவைத்ததுடன் மீண்டும் சபை ஆரம்பிக்கப்பட்டவுடன் தவிசாளர் வாக்கெடுப்பை பணித்தார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மறுத்து முஸ்லிம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன் பிரேரணைகளில் இருந்த பிரச்சினைகளை ஆராய குழுநிலை விவாதம் ஆரம்பிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன் வழக்கறிஞருக்கு தற்போது வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை ரூபா 10,000 ஆக அதிகரித்தல் தொடர்பிலான பிரேரணை தவிசாளரினால் வாபஸ் பெறப்பட்டது.
இதற்கிடையில், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான காணி கடந்த 50 ஆண்டுகளாக திண்மக்கழிவு இடமாற்று நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அக்காணியில் தகனசாலை அமைப்பதற்கும், புதிய சட்டபூர்வ குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 30 ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதற்குமான அனுமதியைப் சபை வழங்கியது.
இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேசத்தின் கல்வி, நிர்வாகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுச் சேவைகளின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் பல விடயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்










0 comments: