Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Thursday, April 2, 2026

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை..!

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை..!

 




𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (01) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வயல்வெளி பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.




சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்ததாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் உயிரிழந்தவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த, சுமார் 50 வயதுடைய ஆதம்பாவா றியால் என்பவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மரணத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவராத நிலையில், சட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி



மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு  ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர்  ரவூப் ஹக்கீம்..!

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்..!

 





𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்..!
✍️ எம்.என்.எம்.யாஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.



பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பின்னர் எங்கள் றோயல் கல்லூரியிலும் கற்றுத் தேறிய அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்று ,பிரித்தானியாவில் பட்டப் பின்படிப்பை நிறைவு செய்திருந்தார்.கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பேராசிரியராகவும், கொழும்பு மருத்துவ பின்படிப்பு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
அத்துடன் , அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அவரது குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், பேராசிரியர் ஷெரீப் தனது நோயாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்கள் மீதும் காட்டிய கருணை, பணிவு, மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நெடுகிலும் நினைவுகூரப்படுவார். அவரது மேன்மை, நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவை மரபு என்பன மருத்துவத் துறையில் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்தும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும். அவர் தனது தாராள மனப் பான்மைக்காகவும், இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் உட்பட, தேவையுள்ளவர்களுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காகவும் பரவலாக நன்கறியப்பட்டவர்.
இந்தத் துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை வழங்குவானாக.ஆமீன்.


அம்பாறையில் 'பிரஜா சக்தி' திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு.மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு..!

அம்பாறையில் 'பிரஜா சக்தி' திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு.மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு..!

 




𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉







அம்பாறையில் 'பிரஜா சக்தி' திட்ட முன்மொழிவு தயாரிப்பு கருத்தரங்கு.மேலதிக அரசாங்க அதிபர் பங்கேற்பு..!
✍️ சர்ஜுன் லாபீர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..
✅👉 பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகங்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'பிரஜா சக்தி' திட்டத்தின் கீழ், முறையான திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு இன்று (31)அம்பாறை மாவட்ட செயலக ஆரியத்தன மண்டபத்தில் நடைபெற்றது.



அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ. முனாஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது, கிராமிய மட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பிலும், அதற்கான வியாபார திட்ட முன்மொழிவுகளை (Business Proposals) சர்வதேச தரத்திற்கேற்ப எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட திட்டங்களுக்கான முறையான வியாபாரத் திட்டங்கள் மற்றும் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, நிலுவையிலுள்ள திட்டங்களை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது குறித்து உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவைகளை இனங்கண்டு, அவற்றுக்கான முறையான செயற்திட்டங்களை உருவாக்கி, உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் ஊடாக மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களுக்குத் திட்ட முன்மொழிவு தயாரிப்பில் உள்ள சவால்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், சமூகப் பொருளாதார மேம்பாட்டில் இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு SEUIARS – 2026..!

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு SEUIARS – 2026..!

 





𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு SEUIARS – 2026..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……….
✅👉 தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடம் ஏற்பாடு செய்த 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு (SEUIARS – 2026) 2026 மார்ச் 31 ஆம் தேதி பீடத்தின் கலைத் தியேட்டரில் இடம்பெற்றது.
“Transformation through Digitalization: Pathways to a Connected Future” (டிஜிட்டல் மாற்றம் மூலம் இணைந்த எதிர்காலம்) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கு, நவீன டிஜிட்டல் மாற்றங்களையும் கலை ஆராய்ச்சிகளையும் இணைக்கும் சர்வதேச மேடையாக அமைந்தது.
இந்நிகழ்வு, ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சி.எம்.எம். மன்சூரின் வரவேற்புரையுடன் தொடங்கியது. இந்த ஆய்வரங்கிற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் 160 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அதில் 110 ஆய்வுகள் விவாதத்திற்காக தேர்வு செய்யப்பட்டன.
பின்னர் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியும் ஆய்வரங்கின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் உரையாற்றினார். அவர் ஆய்வரங்குகளின் முக்கியத்துவத்தையும், இத்தகைய சர்வதேச நிகழ்வுகள் வழங்கும் கல்வி வாய்ப்புகளையும் வலியுறுத்தினார்.
அடுத்து பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உரையாற்றி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வளர்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
பின்னர் முக்கிய உரையாளர் அறிமுகத்தை பொருளாளர் திருமதி ஏ.எப். தஹாரா வழங்கினார். அதன் பின்னர் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி ஐனோல் மட்ஸியா ப்த். சுபைரி அவர்கள் இணைய வழியாக முக்கிய உரையை வழங்கினார். அவர் தனது உரையில் உலகளாவிய கலை ஆய்வுகளின் தற்போதைய நிலை, கலாசார பரிமாற்றத்தின் அவசியம் மற்றும் எதிர்கால கல்வி ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
இந்த ஆய்வரங்கில் பல முக்கிய தலைப்புகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. அவற்றில்:
• டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கம்
• டிஜிட்டல் யுகத்தில் சமூகம் மற்றும் கலாசாரம்
• புவியியல் தகவலியல் மற்றும் சுற்றுச்சூழல்
• மொழி, இலக்கியம் மற்றும் பயன்பாட்டு மொழியியல்
• தத்துவம், உளவியல், கல்வி மற்றும் டிஜிட்டல் நலன்
• அரசியல், அமைதி மற்றும் டிஜிட்டல் ஆட்சி
• தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல்
• வரலாறு மற்றும் பன்னிருவியல் ஆய்வுகள்
நிகழ்வின் இறுதியில் செயலாளர் கலாநிதி எம்.ஐ.எப். கரீமா நன்றி உரையாற்றி நிகழ்வை நிறைவு செய்தார்.
இந்த சர்வதேச ஆய்வரங்கில் பீடாதிபதிகள், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுகளை பகிர்ந்து கொண்டனர். கலை மற்றும் கலாசார ஆய்வுகளை மேம்படுத்தும் முக்கிய தளமாக இந்நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி